தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை.. FAFT எச்சரிக்கை
டெல்லி: தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதி உதவிகளை தடுப்பதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக, நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) 'கிரே லிஸ்ட்டில்' பாகிஸ்தான் தொடர்ந்து வைக்கப்பட்டு உள்ளது என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ, அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது, போன்ற தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி செல்வதை தடுக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த அமைப்பு பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
பாரிஸில் நடைபெற்ற FATF இன் முழுமையான கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பிடிஐ தெரிவிக்கிறது. இந்த உத்தரவால், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமாகவே தொடரப்போகிறது. இது பாகிஸ்தானின் நிதி நிலையை இன்னும் மோசமானதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020ம் ஆண்டு, ஜூன் மாதத்திற்குள் அனைத்து 27 வகை இலக்குகளையும் பூர்த்தி செய்து, தீவிரவாதிகளுக்கு நெருக்கடி கொடுக்குமாறு, ஏற்கனவே, பாகிஸ்தான் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும், FATF பாகிஸ்தானை, க்ரே பட்டியலில் வைத்துள்ளதே தவிர, கறுப்புப் பட்டியலுக்கு தள்ளவில்லை.
தீவிரவாத நிதியுதவி தொடர்பான 27 நடவடிக்கைகளில் 13ஐ பூர்த்தி செய்ய பாகிஸ்தான், ஒப்புக்கொள்ளவில்லை. அவற்றில் சில பணமோசடி தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.