பொய்ய சொன்னாலும் பொருந்த சொல்லனும்... சுட்டு வீழ்த்தப்பட்டது பாக். போலீஸ் கண்காணிப்பு விமானமே...
டெல்லி: இந்திய ஆளில்லா வேவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வருவது அப்பட்டமான பொய் எனத் தெரியவந்துள்ளது. அந்த நாட்டு போலீசுக்கு சொந்தமான சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா கண்காணிப்பு விமானம்தான் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ஆளில்லா வேவுவிமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் அது சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான் நாட்டு போலீசுக்கு சொந்தமானது.
இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் போதெல்லாம் அந்நாட்டு ராணுவம் எப்படியெல்லாம் குறுக்குசால் ஓட்டுகிறது... குழப்புகிறது என்பதற்கு இதுதான் நல்ல உதாரணம்.. ரஷ்யாவின் உஃபா நகரில் இருநாட்டு தலைவர்களும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய போதே எல்லையில் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ராணுவம்.
தற்போது இந்திய ஆளில்லா வேவு விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக கதைவிடுகிறது.. பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் பஞ்சாப் மாகாண போலீசுக்கு சொந்தமான விமானத்தைத்தான்.. அந்த கண்காணிப்பு விமானத்தைத்தான் தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டிருக்கிறது பாகிஸ்தான் ராணுவம்..
இந்த நெடுஞ்சாலை ஆளில்லா கண்காணிப்பு விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. இது போன்ற விமானங்களை இந்தியா பயன்படுத்தியதே இல்லை என்று ஒன் இந்தியாவுக்கு உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அந்நாட்டு பிரதமர் இந்தியாவுடன் அமைதி முயற்சிகளை மேற்கொள்ள விரும்புகிறார்.. ஆனால் அந்நாட்டு ராணுவம் இதனை ஒப்புக் கொள்ளாமல் குழப்பிக் கொண்டு இருக்கிறது. இதற்காக காஷ்மீர் எல்லையில் உள்ள ராணுவத்தினருக்கு பணத்தை வாரி இறைக்கிறது... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ அதிகாரிகளுக்கு ஊதியத்தை இரு மடங்காக்கியுள்ளது..
இவை அனைத்துமே இந்தியாவுடன் அமைதி முயற்சிகளை மேற்கொள்ளும் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அந்நாட்டு ராணுவம் விடுக்கின்ற ஒரு எச்சரிக்கையே என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.