வாகா எல்லையில் தவறுதலாக இந்திய பகுதிக்குள் வந்த பாக். முன்னாள் அமைச்சர் குரேசி
டெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஷா முகமது குரேசி தவறுதலாக உள்ளே நுழைந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாகா எல்லையின் பாகிஸ்தான் பகுதியில் கடந்த 2-ந் தேதியன்று நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 61 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து வாகா எல்லையை பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவருமான ஷா முகமது குரேசி கடந்த வியாழன்று பார்வையிட்டார்.
அப்போது பாதுகாப்பு படையினருடன் பேசியபடியே நடந்து வந்த குரேசி, பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்து அங்கு ராணுவ வீரருடன் கை குலுக்கினார். உடனே ஓடி வந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் எல்லை என வரையறுக்கப்பட்ட கோட்டைத் தாண்டி குரேசி சென்றுள்ளதை சுட்டிக்காட்டினார்.
இதனை உணர்ந்த குரேசி உடனே பாகிஸ்தான் பகுதிக்குள் திரும்பி வந்து நின்று கொண்டார். அப்போது சிரித்துக் கொண்டே, இந்தியப் பகுதிக்குள் நுழைந்துவிட்டேன் என்று குரேசி கூற அவருடன் இருந்த ஒருவர், அதுவும் விசா இல்லாமல் என்று கூறினார்.
ஒரு சில அடிகளே குரேசி இந்திய பகுதிக்குள் தவறுதலாக நுழைந்திருந்தாலும் இது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒருநாட்டின் எல்லைக்குள் ஒரு அடி உரிய அனுமதியின்றி நுழைந்தாலுமே ராணுவம் எல்லை தாண்டியதாக அந்நபரை கைது செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.