மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்?... அச்சத்தில் தீவிரவாத முகாம்களை இழுத்து மூடும் பாகிஸ்தான் ராணுவம்!
டெல்லி: இந்திய ராணுவம் மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தும் என்ற அச்சம் காரணமாக, எல்லையோரம் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் ராணுவம் மூடி வருவதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் 14ந் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் ராணுவ வாகனம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பிப்ரவரி 26ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில், 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானிற்குள் புகுந்து இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற இத்தாக்குதல் உத்தி, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டுமின்றி, அந்நாட்டு ராணுவத்திற்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், தீவிரவாதிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு, இந்தியா மீது மறைமுக தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வருகிறது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றலாமா.. வைத்திலிங்கம் மீது ஓபிஎஸ் அப்செட்
இந்த நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவீரவாத அமைப்புகள் குறித்து இந்தியா ஆதாரத்துடன் பல தகவல்களை சர்வதேச அரங்கில் எடுத்து வைத்தது. மேலும், பாகிஸ்தானுக்கும் ராஜாங்க ரீதியில் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதனால், வேறு வழியில்லாமல் தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய எல்லையோரம் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மற்றும் பயிற்சி முகாம்களை மூடுவதற்கு அந்நாட்டு ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 11 தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது அதில் 5 இயக்கங்கள் மட்டுமே அங்கு செயல்பட்டு வருவதாக பல்வேறு உளவு அமைப்புகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டி செயல்பட்டு வந்த பல தீவிரவாத முகாம்கள் மூடப்பட்டுள்ளன. லஸ்கர் இ தொய்பா, ஜேய்ஸ் இ முகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை தற்காலிகமாக மூடுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதி, தீவிரவாத முகாம்களை மூடுவதற்கு பாகிஸ்தான் ராணுவமும், உளவுத் துறையும் அறிவுறுத்தி உள்ளதாக இந்திய உளவு அமைப்புகளின் தகவல்கள் உறுதி செய்துள்ளன.
மேலும், பாலகோட்டில் தீவிரவாத முகாம் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பின்னர், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவல் முயற்சியும் இல்லை என்றும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாத முகாம்களை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூடுவதற்கு அந்நாட்டு ராணுவம் அறிவுறுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களின் கண்காணிப்பின் அடிப்படையில் இந்த தகவலை உளவு அமைப்புகள் வழங்கி இருக்கின்றன.