காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு பாக்., தூண்டுகிறது... இந்திய ராணுவம் எச்சரிக்கை
ஸ்ரீநகர்: காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுத்த பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உதாம்பூரில் லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங் பேசியதாவது :- ஜம்மு காஷ்மீர் இளைஞர்களிடம் ஆதரவை பெறுவதற்காக, பாகிஸ்தான் ராணுவம் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது.
இதன் மூலம் காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதம் நோக்கி இழுத்து, காஷ்மீரில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கிறது.
தீவிரவாதம் ஒட்டு மொத்த உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது. தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இப்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.
வரும் ஆண்டுகளில், காஷ்மீரில் அமைதி மற்றும் நல்ல வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தீவிரவாத முகாம்கள் மீது மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறினார்.