'புல்’அறுக்க எல்லை தாண்டியவர் சுட்டுக்கொலை: இந்திய தூதருக்கு பாக். சம்மன்
டெல்லி: எல்லை தாண்டிய பாகிஸ்தானியரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்ற விவகாரம் தொடர்பாக இந்தியத் தூதரை நேரில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானை சேர்ந்த தவுகீர் என்பவர் எல்லையில் நரோவால் என்ற இடத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அவருடன் மேலும் 2 பேர் இருந்தனர்.
அப்போது கவனக் குறைவாக எல்லைதாண்டிய தவுகீரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் எந்தவித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் சுட்டனர். இதனால் காயம் அடைந்த அவரை பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைக்க மறுத்து விட்டனர். பின்னர் அவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பிலேயே உயிரிழந்தார்.
இதே போன்று முகமது தின் என்பவரும் சர்வதேச எல்லை கட்டுப்பாடு பகுதியில் ராவ்லா கோட் என்ற இடத்தில் இந்திய படைகளால் சுட்டு கொல்லப்பட்டார். இந்திய வீரர்கள் எல்லையில் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
எனவே, இந்தியா பொது மக்களின் உயிர்களை மதிக்க வேண்டும். விதிமுறை மீறி துப்பாக்கி சூடு நடத்த கூடாது. அதனால் ‘‘மதிப்பு மிக்க உயிர்கள் இழப்பு ஏற்படுகிறது‘‘ என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆகஸ்டு மாதத்தில் தவறுதலாக எல்லை தாண்டி வந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை நல்லமுறையில் நடத்தி நல்லெண்ண அடிப்படையில் அவரை பாகிஸ்தான் ராணுவம் திரும்ப ஒப்படைத்தது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் இரு தரப்பிலும் 20 பேர் பலியாகினர். காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ உதவுவதற்காகவே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வீசுவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.