எல்லையில் 80 கிராமங்கள், 60 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று இரவும் 80 இந்திய கிராமங்கள், 60 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த 1-ந்தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லை மற்றம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளையொட்டிய இந்திய பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்த போதிலும் பாகிஸ்தான் தனது அட்டகாசத்தை நிறுத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக இந்திய கிராமங்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தியது. தானியங்கி ஆயுதங்கள், சிறிய ரக மோட்டார் பீரங்கிகளால் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது.
ஜம்மு, கதுரா, சம்பா ஆகிய மாவட்டங்களில் சர்வதேச எல்லையில் நேற்று இரவு 80 கிராமங்கள், 60 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்த போதிலும் தனது தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
இரவு நடைபெற்ற தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்களில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 75-க்கும் மேலானோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் இப்பகுதியில் இருந்து இதுவரை 16 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.