பாக். புதிய ஏவுகணை பரிசோதனை... இந்தியாவுக்கு டென்ஷன் கொடுக்குறாங்களாமாம்!
பாகிஸ்தான் புதிய ஏவுகணை பரிசோதனை செய்துள்ளதால் இந்தியாவின் இருபக்க எல்லையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
டெல்லி: இந்திய எல்லையில் சீனா கடும் நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், பாகிஸ்தான் புதியதாக சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால், இந்தியாவின் இருபக்க எல்லையிலும் பதற்றம் கூடியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது சுமூகமான நிலை இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபடுவதாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூறி வருகிறது.
மேலும், காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் தீவிரமாகக் கையில் எடுத்துக் கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பேசி வருகிறது. இது இந்தியாவைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், தரையிலிருந்து குறைந்த தூரம் சென்று இலக்கை தாக்கும் 'நாஸ்ர்' என்ற ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் பரிசோதனை செய்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேறியதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் குறிப்பாக இந்தியாவை குறிவைத்தே அங்கு தயாரிக்கப்படுகிறது. இந்த சோதனைக்கு பின்னர் பேசிய அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி ஆலம் பஜ்வா, "எங்கள் இலக்கு ராணுவ பலம் மிக்க அண்டை நாடுகளுடன் அமைதியை கடைப்பிடிப்பது தான். போர் வேண்டாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு" என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ள விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.