எல்லைக் கோட்டில் பாகிஸ்தான் அத்துமீறல்... இந்தியா பதிலடி #locattacck
ஜம்மு: காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய எல்லைகள் மீது குறித்து வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனால் அங்கு இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பூஞ்ச் செக்டாரில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்தப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
மோட்டார் ஆயுதங்கள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் சிறியரக துப்பாக்கிகளை கொண்டு பாகிஸ்தான் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதனை இந்திய ராணுவம் எதிர்த்து சண்டையிட்டு வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் தேதி ஜம்மு மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள அக்னூர் செக்டாரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் பூஞ்ச் செக்டாரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பாகிஸ்தான் கடந்த ஓராண்டில் மட்டும் 405 முறை அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 71 படுகாயம் அடைந்துள்ளனர். போர் நிறுத்த அத்துமீறல் சம்பவம் 253 சர்வதேச எல்லையிலும் 152 எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் நடந்துள்ளன. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் செயல்பாட்டால் கிராம மக்கள் சுமார் 8 ஆயிரம் பேர் சொந்த வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களில் சென்று குடியேறியுள்ளனர்.