எல்லையில் பாக். தாக்குதல்- தந்தை, மகன் பலி; 7 பேர் படுகாயம்- 2 ஆயிரம் பேர் வெளியேற்றம்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உட்பட இருவர் பலியாகினர். பாகிஸ்தானின் இத் தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் முகமது அக்ரம், அவரது மகன் அஸ்லாம் ஆகிய இருவரும் பலியாகினர்.
அக்ரமின் மனைவி, 3 குழந்தைகள், எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஜம்மு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் இப்படி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோரத்தில் உள்ள 3 கிராமங்களில் இருந்து 2000 பேர் வெளியேறியுள்ளனர். உயிரை காப்பாற்றிக் கொள்ள உடைமைகளையும், கால்நடைகளையும் அப்படியே விட்டு விட்டு அகதிகளாக தப்பிச் சென்றனர்.
கிராமங்களை விட்டு வெளியேறிய பொதுமக்கள் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இன்றும் 22 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.