அத்துமீறும் பாகிஸ்தான்...எல்லையில் பதற்றம்...பள்ளிகள் காலவரையின்றி மூடல்!
இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர் : இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியாக தாக்குதல் நடத்தி வருவதால் அந்தப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் காலவரையின்றி மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. இன்று காலை 7.30மணியளவில் இந்திய எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களான கோரி, தனகா, சர்யா, ஜங்கர் மற்றும் கம்பா வழியாக பாகிஸ்தான் ராணுவம் நவ்சேரா செக்டாரில் நடத்தியுள்ளது.
இதற்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது, இரு தரப்பு மோதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 4 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. ஷெல் தாக்குதலில் உயிரிழந்த இருவர்கள் 51 வயது மூதாட்டி மற்றும் அவரது உறவினரின் 13 வயது மகள் என்பது தெரிய வந்துள்ளது.
3வது தாக்குதல்
இன்று நடைபெற்ற ஷெல் தாக்குதல், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற இரண்டாவது போர்நிறுத்த மீறலாகும். கடந்த 3 நாட்களில் மட்டும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் எல்லை தாண்டி வந்து நடத்தும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
ஒரு வீரர் மரணம்
ஜம்மு காஷ்மீரிலுள்ள அர்னியா பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்களை எச்சரிக்கும் விதமாக பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் நேற்று காலையும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக எல்லை பாதுகாப்புப் படையின் இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
பெண் உயிரிழப்பு
மே 11ம் தேதி பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு அந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
பள்ளிகள் மூடல்
இன்று ராஜோரி மாவட்டம் நவ்ஷரா டெஹ்சில் நகரத்தில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, துணை பிரதேச நீதிபதியின் உத்தரவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பகுதியிலிருக்கும் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. எல்லையோரம் வசிக்கும் 1200க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.