தண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்
Recommended Video
டெல்லி: பாகிஸ்தானுக்கு வரக்கூடிய நதிநீரை, இந்தியா, மடைமாற்றம் செய்தால், அது அத்துமீறிய தாக்குதலாகவே கணக்கில் எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் மகாராஷ்டிரா போலவே, வரும் 21ஆம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி குருக்ஷேத்திரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குள் செல்லக்கூடிய நதிகளை தடுத்து நிறுத்தி அதை ஹரியானா விவசாயிகளுக்கு பலன் பெற மாற்றி தருவோம் என்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கடந்த 70 ஆண்டுகளாக ஹரியானா விவசாயிகளுக்கு சொந்தமான தண்ணீர் பாகிஸ்தானுக்குள் பாய்ந்து வருகிறது. ஆனால் இந்த மோடி அந்த தண்ணீரை தடுத்து நிறுத்தி உங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன். இது தொடர்பாக நான் ஏற்கனவே பணிகளை ஆரம்பித்து விட்டேன்.
அந்த தண்ணீர் என்பது இந்தியாவுக்கும், ஹரியானா விவசாயிகளுக்கும் சொந்தமானது. நான் உங்களுக்காக போராடி வருகிறேன் என்று தெரிவித்தார்.
மோடியின் இந்த கருத்துக்கு கூட்டத்திலிருந்து மிகப் பெரிய கரவோசை எழுந்தது கவனிக்கத் தக்கதாக இருந்தது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமையை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது பாகிஸ்தானை கோபப்படுத்தியது. இந்த நிலையில் அடுத்ததாக பாகிஸ்தான் செல்லக்கூடிய தண்ணீரையும் தடுத்து நிறுத்துவோம் என்று பிரதமர் கூறிய கருத்து, பாகிஸ்தானுக்கு அச்சமூட்டி உள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், "இந்தியாவின் மேற்குப் பகுதியில் உற்பத்தியாக கூடிய மூன்று நதிகளின் முழு உரிமையும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இந்த நதிகளின் போக்கை இந்தியா மாற்றினால் அது அத்துமீறிய தாக்குதலாகவே கணக்கில் கொள்ளப்படும். அவ்வாறான, செயலை இந்தியா செய்யுமானால் பாகிஸ்தானும் அதற்கு தக்க பதில் வழங்கும். இவ்வாறு முகமது பைசல் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்சினை இழுபறியில் இருக்கும்போதே, இப்போது இரு நாடுகள் இடையே, தண்ணீர் பிரச்சினை தொடங்கியுள்ளது. அதெல்லாம் இருக்கட்டும், இந்திய பொருளாதாரத்தின் கதி என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள்.