பாகிஸ்தான் அரசு தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்காது... சொல்கிறார் ப.சிதம்பரம்!
டெல்லி: நிழல் உலக தாத தாவூத் இப்ராகிம்மை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைக்காது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். அவரை கைது செய்வதற்கு ‘ரெட் கார்னர் நோட்டீசும்' விடுக்கப்பட்டது.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள தாவூத் இப்ராகிம், இருப்பிடம் குறித்த பல்வேறு முக்கிய ஆவணங்களை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா அளித்துள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அரசு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து இதை மறுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஆங்கில செய்தி சேனல் நிறுவனம் இதுதொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கராச்சியில் உள்ள க்ளிப்டன் பகுதியில் தாவூத் தங்கி இருக்கும் வீட்டை காட்டியுள்ளனர். முன்பு பின்லேடன் வீட்டிற்கு கொடுக்கப்பட்ட அளவிலான பாதுகாப்பை தாவூத்துக்கும் வழங்கி இருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் தாவூத் இப்ராகிம் அங்கு வாழ்ந்து வருவது அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே, தாவூத் இப்ராகிம் இதே முகவரியில் வசித்து வருவதை ஆதாரத்துடன் கூறி, அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு பலமுறை வலியுறுத்தியும் பாகிஸ்தான், அதை செய்யவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், பாகிஸ்தான் தாவூத் இப்ராகிம்மை இந்தியாவிடம் ஒப்படைக்காது எனக் கூறினார். மேலும் தாவூத் இப்ராகிம் அடைக்கலம் கோரினார் என்பதையும் பாகிஸ்தான் ஒத்துக் கொள்ளாது.
தாவூத் பாகிஸ்தானில் இருப்பது தொடர்பான ஆவணத்தை நாங்கள் பாகிஸ்தானிடமே அளித்தோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அதை மறுத்து வந்தனர். தாவூத்தை அவர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டார்கள் என்று கூறினார்.