எல்லையில் இந்தியா தடுப்பு சுவர் அமைக்கிறது... ஐ.நா.விடம் பாக். புலம்பல்
டெல்லி: எல்லையில் 10 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. சபைக்கு பாகிஸ்தான் கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். எல்லையோர கிராமங்களில் பொதுமக்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் லோதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 2 புகார் கடிதங்கள் எழுதி உள்ளார். அதில், காஷ்மீர் சர்வதேச பிரச்னை. இதில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. ஆனால், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் சுமார் 192 கிமீ தொலைவுக்கு, 10 மீட்டர் உயரம் மற்றும் 135 அடி அகலத்தில் இந்தியா தடுப்புச் சுவர் கட்ட உள்ளது என கூறியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நியூயார்க்கில் அளித்த பேட்டியில், சரியான நேரத்தில் இதற்கு பதில் அளிப்போம் எனக் கூறி உள்ளார்.
இதனிடையே ஐ.நா. கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் எழுப்புவார் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பினால் தக்க பதிலடி தரப்படும் என்று கூறி உள்ளார்.