பாகிஸ்தானில் ‘குர்பானி’ காளை முட்டி அதன் உரிமையாளர் பலியான பரிதாபம்
லாகூர்: பாகிஸ்தானில் குர்பானி கொடுப்பதற்காக வாங்கி வந்த காளை மாடு முட்டி அதன் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தியாக திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை 'குர்பானி' எனப்படும் உயிர்பலி கொடுத்து இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில், பழங்குடியினர் வசிக்கும் வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று பக்ரீத் கொண்டாடப்பட்டது.
லாகூரில் இருந்து 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஹபீஸாபாத் பகுதியை சேர்ந்த முஹம்மது அக்தார் என்பவர் பக்ரீத் பண்டிகைக்கு பலி கொடுப்பதற்காக 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து ஒரு காளை மாட்டை வாங்கி, வீட்டு வாசலில் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.
நேற்று காலை அந்த காளைக்கு அவர் தீனி வைத்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக அவர் மீது சீறிப்பாய்ந்த காளை, தனது கூரிய கொம்புகளால் அவரை முட்டி மோதி, தரையில் சாய்த்தது.
அக்தார் காளையிடம் சிக்கிக் கொண்டதைக் கண்டு பதறிய உறவினர்கள் காளையிடம் இருந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் அக்தார்.