இந்திய அரசின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி: அபாய சங்கு ஊதும் பாகிஸ்தான் பத்திரிகை
டெல்லி: இந்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு பத்திரிகை தனது தலையங்கத்தில் பயமுறுத்தியுள்ளது.
நரேந்திரமோடி தலைமையிலான அரசின் முதலாவது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த 10ம்தேதி தாக்கல் செய்தார். அப்போது ராணுவத்தை நவீனமாக்க 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
கதி கலங்கிய பாகிஸ்தான்
இந்த அறிவிப்பால் பாகிஸ்தான் கதி கலங்கிப்போயுள்ளது. அந்த நாட்டின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான 'தி நேஷன்' தனது தலையங்கத்தில் பாகிஸ்தான் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தயாரா?
தலையங்கத்தில் கூறுகையில் "இந்தியா தனது சக்தியை அதிகரித்து காண்பிக்க நிதி ஒதுக்கீட்டை ராணுவத்துக்கு அதிகரித்திருந்தால் அதை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ளப்போகிறது. மின்சாரம், குடிநீர் பிரச்சினைக்கு நடுவே மற்றுமொரு அதிகாரப்போரை இந்தியாவுக்கு எதிராக சந்திக்க பாகிஸ்தான் தாயாராக உள்ளதா. ராணுவத்துக்கு பாகிஸ்தான் அதிக நிதி ஒதுக்கினால் மக்களின் அன்றாட தேவைகளை எப்படி பூர்த்தி செய்யும்.
வீண் செலவா?
ராணுவத்துக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்வது நாட்டின் வளத்தை வீணாக்குவது போலாகும் என்று பிரதமர் நவாஸ் ஷெரிப் கடந்தாண்டு கூறினார். இப்போதும் அதே நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறாரா என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
சீனா மீதான அச்சமும் காரணம்
இந்திய அரசு பாதுகாப்பு துறைக்கு பட்ஜெட்டில் 12 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நரேந்திரமோடி தலைமையிலான அந்த நாட்டு அரசு தேசிய கொள்கையில் அதிக ஈடுபாடு காட்டுவதை இது காண்பிக்கிறது. இந்திய அரசு ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது பாகிஸ்தான் மீதான அச்சத்தின் காரணமாக மட்டுமாக இருக்காது. சீனா தனது ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதையும் இந்தியா கருத்தில்கொண்டே இதுபோல கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கும் என்று கருதமுடியும்.
பதிலடி கொடுத்ததை மறந்துவிட்டாரா?
இந்தியாவுடன் நல்ல உறவை மேம்படுத்த நவாஸ் ஷெரிப் மிகவும் பிரயத்தனப்படுவதை போல தெரிகிறது. அதே நேரம், 1998ம் ஆண்டு இந்தியா 5 அணு குண்டு சோதனை நடத்தியதற்கு பதிலடியாக அப்போதைய நவாஸ் ஷெரிப் அரசு 6 முறை அணுகுண்டு சோதனை நடத்தியதை மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அந்த பத்திரிகை தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.