ராஜஸ்தானில் 35 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துடன் சிக்கிய பாக். உளவாளி!
ஜெய்சல்மர்: இந்தியாவுக்குள் 35 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துடன் நுழைந்த பாகிஸ்தான் உளவாளி நந்தலால் மகராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த டைரி, 2 மொபைல் போன்கள், சாட்லைட் போன், சில சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் தங்கி இருக்கும் நந்தலால் மகாராஜ், பாகிஸ்தானில் துணிக்கடை நடத்தி வருகிறார். இதனால் அடிக்கடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு போவதும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வருவமாக இருந்தார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ சட்ட விரோத விஷயங்களில் நந்தலால் மகாராஜை ஈடுபடுத்தி வந்தது. இது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து நந்தலால் மகாராஜை கண்காணித்த போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் 35 கிலோ ஆர்.டி.எக்.ஸ் வெடிமருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தொடர்ந்து நந்தலாலை விசாரித்த போது, ஐஎஸ்ஐ நிறைய பணம் கொடுப்பதாக கூறியதால் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டதாக ஒத்து கொண்டார்.
பாக் உளவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் உள்ள பல தகவல்களை வைத்து தொடர் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் 35 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து எதற்காக எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்தும் தீவிர விசாணை நடைபெற்று வருகிறது.
வெடி மருந்துடன் நந்தலால் மகராஜ் பிடிபட்ட போது, கூட்டாளிகள் 8 பேர் தப்பியோடியுள்ளனர். அவர்கள் யார் என்பது பற்றியும் தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.