பாலக்காடு அரசு ஐடிஐக்கு நிரஞ்சன்குமார் பெயர்... உம்மன்சாண்டி அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அரசு ஐடிஐக்கு நிரஞ்சன்குமார் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி உறுதியளித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடனான மோதலில் 7 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) அதிகாரி கர்னல் நிரஞ்சன்குமாரும் ஒருவர்.
அவரது உடல் பாலக்காடு கொண்டு வரப்பட்டு மண்ணார்காட்டில் உள்ள வீட்டு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ‘வீரமரணம் அடைந்த நிரஞ்சன்குமார் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதனால் அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்க அரசு தீ்ர்மானித்துள்ளதாக' கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
இது தவிர, ‘அவரது மனைவி டாக்டர் ராதிகாவுக்கு அரசு வேலை வழங்கப்படும். அவரது மகள் விஸ்மயாவின் படிப்பு செலவு முழுவதையும் அரசு ஏற்கும். நிரஞ்சன்குமாரின் தியாகத்தைப் போற்றும் வகையில் பாலக்காட்டில் உள்ள அரசு ஐடிஐக்கு அவரது பெயர் சூட்டப்படும்' என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.