பாலாறு விவகாரம்: விஜயவாடாவில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
ஆந்திரா: பாலாற்று உரிமையை மீட்க ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரயில் நிலையம் எதிரே மிக உயர்ந்த இடத்தில் தென்மண்டல தமிழர் படை தளபதி முருகானந்தம் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலங்களுக்கு இடையிலான பாலாறு தொடர்பாக, கடந்த 1892-ல் அப்போதைய மெட்ராஸ் அரசு, மைசூர் சமஸ்தானங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில் மேல் பகுதியில் உள்ள மாநிலங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் பரப்பையோ,உயரத்தையோ அதிகரிக்கக் கூடாது. மேலும், உரிய அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதோ, தண்ணீரை திருப்பி விடுவதோ கூடாது என கூறப்பட்டுள்ளது.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்தி கட்டும் ஆந்திர அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஏற்கனெவே போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் அக்கட்சியின் சார்பில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று போராட்டம் நடைபெற்றது.
அரசியல் கட்சிகள் கண்டனம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணையே கட்டக் கூடாது என்று தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் ஆந்திராவின் நடவடிக்கை இருந்து வருகிறது. ஆந்திராவின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தின் உள்ள 2,000 ஏக்கர் விவசாயம் பொய்த்துப் போகும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது. இதை நம்பியுள்ள விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகும்.
பாலாறு தடுப்பணை
தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக அதிகரிக்கும் பணியை ஆந்திர அரசு மேற்கொண்டது.மேலும் 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பதுடன் பாலாற்றின் துணை நதியான திப்ரே ஆற்றில் 6 புதிய தடுப்பணைகளையும் கட்ட ஆந்திரா முடிவு செய்துள்ளது
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
இதனிடையே வாணியம்பாடியை அடுத்த புல்லூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயர்த்தி கட்டி இருப்பதை கண்டித்து சில வாரங்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் திம்மாம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசையும், ஆந்திர அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாற்றில் உள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க ஆந்திர அரசை அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
விஜயவாடாவில் போராட்டம்
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரயில் நிலையம் எதிரே மிக உயர்ந்த இடத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இன்று போராட்டம் நடத்தியது. தென்மண்டல தமிழர் படை தளபதி முருகானந்தம் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது,