உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் கட்சி தலைகள் உருண்டன.. முலாயமுக்கு தர்மசங்கடம்!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் ஆளும் சமாஜ்வாடி கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களும் பல்வேறு அமைச்சர்களின் உறவினர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
இதுவரை மண்டலவாரியாக 35,000 வார்டுகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக உள்ள 3112 இடங்களில், இதுவரை 19 பஞ்சாயத்துகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநில அமைச்சர்களான மனோஜ் குமார் பண்டே, எஸ்.பி.யாதவ் ஆகியோரின் உறவினர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். காஷிபூர் மாவட்ட சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட அமைச்சர் கைலாஷ் யாதவ்வின் மகன் தோல்வி அடைந்துள்ளார்.
பெரும்பாலான இடங்களில் சமாஜ்வாடி கட்சி பெரும் தோல்வியையே சந்தித்துள்ளது. இது குறித்து அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் கூறுகையில், சமாஜ்வாடி கட்சியின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்ட நேரம் வந்துவிட்டது. இந்தத் தேர்தல் முடிவுகளே அதற்கு சிறந்த உதாரணம். சமாஜ்வாடி கட்சியை வழி அனுப்பி வைக்கும் நேரம் வந்துவிட்டது என்றார்.