திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ரூ. 186 கோடி மதிப்பு 769 தங்க கலசங்கள் மாயம்- பகீர் அறிக்கை
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் 186 கோடி மதிப்புள்ள 769 தங்க கலசங்கள் திருடப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பத்மநாபசுவமி கோயில்தான் தற்போது இந்தியாவிலேயே பணக்கார கோவிலாகும். இந்த கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இவ்வறைகளில் பல கோடி மதிப்புள்ள அரிய பொக்கிஷங்கள் இருப்பதாகவும், இவற்றை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும் கோயில் ஊழியர்களும் திருடி செல்கின்றனர், எனவே இந்த பொக்கிஷங்களை மதிப்பிட போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடந்த சில வருடங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம் ரகசிய அறைகளை திறந்து பொக்கிஷங்களை பரிசோதிக்க ஓர் குழுவை அமைத்தது. ஆனால் பி ரகசிய அறையை திறக்கக் கூடாது எனவும், பல நுாற்றாண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள இந்த அறையை திறந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் எனவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதை அடுத்து பி அறையை தவிர மற்ற அறைகளை திறந்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஆய்வின்போது ஐந்து அறைகளிலும் இருந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம், மாணிக்கம் என விலை மதிப்பில்லாத அரிய வகை பொக்கிஷங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வைர கிரீடங்கள், பல்வேறு கலை அம்சங்களுடன் கூடிய நகைகளும் காணப்பட்டன. இது தவிர மூட்டை மூட்டையாக தங்க நாணயங்கள், சுமார் ஒரு கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள ஏராளமான தங்க குடங்களும் காணப்பட்டன.
இந்த ஐந்து அறையிலும் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கோயிலை சுற்றிலும் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களின் உண்மையான மதிப்பை கண்டறிய முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் தலைமையில் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இது தவிர கோயில் சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதா என கண்டறிய கோபால் சுப்பிரமணியம் என்ற சிறப்பு வக்கீலையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது. இரு குழுவினரும் நீதிமன்றத்தில் இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட அறிவிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த அனைத்து அறிக்கைகளிலும் கோயில் ரகசிய அறையில் இருந்து ஏராளமான பொக்கிஷங்கள் திருடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வினோத்ராய் தலைமையிலான தற்போது கமிட்டி ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையின்படி 186 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 769 தங்க பானைகள் எங்கு உள்ளது என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், தங்கத்தை சுத்திகரிக்கும் முறையில் விகிதம் மாறியதால் ரூ.2.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் எஞ்சிய அளவு உள்ள தங்கம் ஒப்பத்தகாரரிடம் இருந்து மீட்காமல் உள்ளதால் அதில் 59 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாவும், கன்னிகா கவுன்டிங் முறையில் வெளிப்படை தன்மையில்லை எனவும் ரூ. 14.18 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் சட்ட விரோதமாக பதிவேற்றில் ஏற்றாமல் இருப்பதாகவும், ரூ.14 லட்சம் மதிப்பிலான வெள்ளி பார் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் கடந்த 1970ம் ஆண்டு ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விற்றத்கு எந்த வித ஆவணங்களையும் இல்லாமல் இருப்பதாகவும், கோயில் நிர்வாக செலவு அசாதாரணமாக ஆண்டிற்கு ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கமிட்டி சார்பில் கோயில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பில் பல்வேறு மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. பல விலை மதிக்க முடியாத பொருட்கள் இருப்பதால் பாதுகாப்பை சற்று அதிகரிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளது.
இந்த ரகசிய அறைகளில் உள்ள ஒவ்வொரு தங்ககலசத்தின் எடை சராசரியாக 1 கிலோவிற்கும் அதிகம். மேலும் ஒவ்வொரு கலசத்திலும் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாங்கள் நடத்திய ஆய்வில் 1988 என்ற எண் எழுதப்பட்ட தங்க கலசம் இருந்தது. இதன் மூலம் அந்த அறையில் குறைந்தது 1988 தங்க கலசங்கள் இருந்திருக்கலாம்.
கோயிலில் நகைகள் செய்வதற்காக 822 தங்க கலசங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் 1,166 தங்க கலசங்கள் அங்கு இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் எடுத்த கணக்கின் படி 397 தங்கக்கலசங்கள் மட்டுமே காணப்பட்டன.
மொத்தம் 769 தங்கக் கலசங்களை காணவில்லை. இவற்றின் மொத்த எடை 776 கிலோவாகும். மேலும் கோயிலில் நகைகள் செய்வதற்கு 887 கிலோ நகைகள் கான்ட்ராக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 624 கிலோ நகைகள் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. 263 கிலோ தங்கம் மாயமாகி விட்டது.
இது தவிர கடந்த 2010ல் கான்ட்ராக்டருக்கு கொடுக்கப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள பதினான்கரை கிலோ தங்க கட்டிகள் கோயிலில் நகைகள் செய்யுமிடத்தில் கவனிப்பாரற்று கிடந்தது. அதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
கடந்த 2007ல் திருவிதாங்கோடு மன்னரின் அறிவுரையின்படி ரகசிய அறைகளில் உள்ள அரிய வகை நகைகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த புகைப்படங்களோ, அவற்றின் நெகட்டீவ்களோ கிடைக்கவில்லை.
இதுகுறித்து கேட்ட போது கோயில் ஊழியர்களுக்கு எதுவும் தெரியவில்லை. புகைப்படம் எடுத்தது கூட யார் என தெரியாது என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் கோயில் ரகசிய அறையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
கோயிலில் பி அறையை கடந்த நுாறு ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கவில்லை என திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் 1990 ஜூலை முதல் 2002 டிசம்பர் வரை அந்த அறையை குறைந்தது ஏழு முறையாவது திறக்கப்பட்டுள்ளது.
இந்த அறையில் இருந்து எவ்வளவு நகைகள் காணாமல் போய் உள்ளன என்பது தெரியாது. ஆனால் இந்த அறையில் ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 35 கிலோ எடையுள்ள ஓர் வெள்ளி கட்டி காணாமல் போய் உள்ளதை கண்டுபிடித்துள்ளோம்.
கோயிலில் உள்ள பொக்கிஷங்களை அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கலாம். இதற்காக கோயில் அருகே உள்ள மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடுமையான பாதுகாப்பு நெருக்கடியால் சிரமம் அடைகின்றனர்.
இது தவிர்க்கப்பட வேண்டும், யுனஸ்கோவின் பாரம்பரிய பட்டியலுக்கு பரிசீலிக்கப்படும் இக்கோயிலில் பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும் வினோத்ராய் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.