உப்பு பஞ்சம்: ஒடிஷாவில் வதந்தியால் கிலோ ரூ.60க்கு விற்பனை
புவனேஸ்வர்: ஓடிஷாவில் உருளைக்கிழங்கைத் தொடர்ந்து ஒரு கிலோ உப்பு ரூ.60க்கு விற்பனையாகிறது.
ஒடிசா மாநிலத்தில் கடந்த மாதம் ஒரு கிலோ 12 ரூபாய் என்ற விலையில் உருளைக் கிழங்கு விற்பனையானது.
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததை அடுத்து உருளைக்கிழங்கு தற்போது 50 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
பரவிய வதந்தி
கடும் உப்புப் பஞ்சம் ஏற்பட போவதாக ஒடிசாவில் திங்களன்று வதந்தி பரவியது. தலைநகர் புவனேஸ்வரிலும், ஜெய்ப்பூர் மாவட்டத்திலும் காலைமுதலே மக்களிடையே உப்பு பற்றி பரபரப்பாக தகவல் பரப்பப்பட்டது.
படையெடுத்த மக்கள்
உருளைக் கிழங்கை போலவே உப்பும் வாங்க முடியாத அரிபொருள் ஆகிவிடுமோ...? என்று மக்கள் அச்சமடைந்தனர். கூட்டம் கூட்டமாக மளிகை கடைகளை நோக்கி மக்கள் படையெடுத்து உப்பினை கிலோ கணக்கில் வாங்கத் தொடங்கினர்.
கிலோ ரூ.60
மக்களின் பீதியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பல வியாபாரிகள் ஒரு கிலோ உப்பை 60 ரூபாய் வரை பேரம் பேசி விற்பனை செய்தனர்.
புவனேஸ்வர், ஜெய்ப்பூர் உள்பட பல மாவட்டங்களில் நேற்று ஒரு கிலோ உப்பு 50-60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வாங்கிய மக்கள்
உப்பு அத்தியாவசியமான பொருள் என்பதால் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிச் சென்றனர் ஒடிஷாவின் மளிகைக்கடைகளில் மூட்டை கணக்கில் இடத்தை அடைத்துக் கொண்டு கிடந்த உப்பு சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தது.
ஏழைமக்கள் அதிர்ச்சி
ஒடிஷா மாநிலத்தில் உருளைக்கிழங்கு வரத்து குறைவினால் விலை உயர்ந்துள்ளது. திடீரென உப்பின் விலையும் உயர்ந்த காரணத்தால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.