உலுக்கும் உப்பு- வடகிழக்கு மாநிலங்களில் கிலோ ரூ. 300 க்கு விற்பனை
டெல்லி: ஒடிஷா, பீகாரைத் தொடர்ந்து உப்பு வதந்தி வடகிழக்கு மாநிலங்களையும் வாட்டி எடுக்கிறது. ஒரு கிலோ உப்பு கிலோ 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் வதந்தி பரவி வருகிறது. பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சில மாவட்டங்களில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதையடுத்து அந்த பகுதிகளில் ஒரு கிலோ உப்பு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பீகார், மிசோராம், மேகாலயா, மேற்கு வங்காளம், அசாம், நாகலாந்து, அருணாசலம் மாநிலங்களில் வதந்தி பரவியது.
கிலோ ரூ.300
உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு உப்புக்களை வாங்கினர். மக்களின் தேவையை உணர்ந்த வியாபாரிகள் கிலோ ரூ.300க்கு உப்பை விற்பனை செய்தனர்.
7 மாநிலங்களில்
மேற்கு வங்காளம், பீகார், மேகாலயா, பிசோராம், அருணாசல பிரதேசம், நாகலாந்து ஆகிய மாநிலங் களிலும் உப்பு தட்டப்பாடு ஏற்பட்டதாக வதந்தி பரவி ஒரு கிலோ உப்பு ரூ. 300 வரை விற்கப்பட்டது.
பதுக்கியவர் கைது
அதேசமயம் உப்பு தட்டுப்பாடு என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். போதுமான அளவில் கையிருப்பு உள்ளது என்று இந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது. உப்பு பதுக்கியதாகவும், கடத்திய தகாவும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உப்பை அதிக விலைக்கு விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
தட்டுப்பாடு இல்லை
உப்பு தட்டுப்பாடு இல்லை அதை பதுக்குபவர்கள், கடத்துபவர்கள் கூடுதல விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில நிர்வாகம் எச்சரித்துள்ளது.
வதந்தியை நம்ப வேண்டாம்
இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு வெளியிட்ட அறிக்கையில், "மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப்பொருள் மற்றும் வழங்கல் துறையின் புள்ளிவிவரப்படி உப்புக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை. சுயலாபம் கருதி வெளியிடப்படும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். வதந்தியைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில் கூடுதல் விலைக்கு உப்பு விற்றதாக 13 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
உப்பு அரசியல்
வெங்காய தட்டுப்பாடு காரணமாக வட மாநிலங்களில் கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டதால் வெங்காய விலை அரசியல் ஆக்கப்பட்டது. தற்போது உப்பு விலையும் 7 வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.