எடப்பாடி பழனிச்சாமியுடன் எனக்கு மனவருத்தம் இல்லை- ஓபிஎஸ்
நாங்கள் இருவரும் இணைந்துதான் செயல்படுகிறோம். எங்களுக்குள் எந்த மனவருத்தமும் கிடையாது என்று துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
டெல்லி: அதிமுக ஆட்சி எந்த சிக்கலும் இல்லாமல் நீடிக்க வேண்டும் என்பதே இருவரின் விருப்பம். முதல்வருக்கும் தனக்கும் எந்த வித மன வருத்தமும் கிடையாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். சரியாக 11 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது.
தமிழகத்தின் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக பிரதமர் உடன் சந்திப்பு நடைபெற்றது. கடந்த முறை ஓபிஎஸ் டெல்லி சென்றிருந்த போது, பிரதமரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கும்படி கேட்டார், ஆனால் அவரை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் அவர் தமக்கு நேரம் ஒதுக்கும்படி பிரதமரிடம் கேட்டுக் கொண்ட பிறகு இன்று சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கினார் மோடி.
பிரதமரை சந்திக்க நேற்றிரவு டெல்லி சென்ற ஓ.பன்னீர் செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் உடன் சென்றனர். பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார்.
அரசியல் பற்றி எதுவும் பேசிவில்லை என்று கூறிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த மனுவை பிரதமரிடம் அளித்ததாக கூறினார். டெங்கு ஒழிப்பிற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கியதாக தெரிவித்தார்.
டெங்கு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு மருத்துவக் குழு தமிழகத்திற்கு வருகிறது என்றும் ஒபிஎஸ் கூறினார்.
முதல்வருடன் மன வருத்தத்தில் இருப்பதாகவும், முதல்வர் பற்றி புகார் அளிப்பதற்காகவே டெல்லி வந்துள்ளதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், இது ஊடகங்களின் கற்பனை என்று கூறினார்.
முதல்வர் அளித்த மனுவை பிரதமரிடம் அளித்ததாக கூறிய ஓபிஎஸ், துணை முதல்வராக பதவியேற்ற தமக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்தார்.
இருவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதாகவும், எந்த மனவருத்தமும் கிடையாது என்றும் கூறினார். உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார்.