வரி ஏய்ப்பாளர்களுக்கு புளியை கரைக்கும் 'பாரடைஸ் பேப்பர்ஸ்'- விசாரணையை தொடங்கிய செபி
வரி ஏய்ப்பு செய்து சொத்து சேர்த்த பிரபலங்களின் பெயர்கள் அடங்கிய ரகசிய ஆவணம் வெளியானது.
டெல்லி : சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட பாரடைஸ் பேப்பர்ஸ் என்கிற ஆவணம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சட்டதிற்கு புறம்பான முறையில் சொத்து சேர்த்ததாக 180 நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் இந்தியா 19வது இடத்தில் இருக்கிறது.இந்தியாவில் இருந்து இந்தப் பட்டியலில் 714 பெயர்கள் உள்ளன.
அமிதாப் பச்சன், தில்ஷாயன் தத், நீரா ராடியா, கார்த்திக் சிதம்பரம், விஜய் மல்லையா உள்ளிட்ட பிரபலங்களும், அப்போலோ டயர்ஸ், ஹிந்துஜா, சிகிஸ்டா ஹெல்த் கேர் உட்பட நாட்டின் பெரிய நிறுவனங்களின் முறைக்கேட்டு ஆவணங்களும் இதில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாரடைஸ் பேப்பர்ஸ் ?
இரண்டு சட்ட ஆலோசனை நிறுவனங்களிடம் இருந்து ரகசியமாக பெறப்பட்ட ஆவணங்களை பல நாடுகளைச் சேர்ந்த 380க்கும் மேற்பட்ட புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆய்வு செய்து, வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்ட சொத்துகள் குறித்து கண்டறிந்து இருக்கிறார்கள். 70 ஆண்டுகளுக்கான அந்த ஆவணத்தில் மொத்தம் ஒருகோடியே முப்பத்து நான்கு லட்சம் பக்கங்கள் இருக்கிறது.
கோல்மால் செய்ய உதவி
பெர்முடாவில் உள்ள ஆப்பிள்பை, சிங்கப்பூரில் உள்ள ஏசியாடிக் நிறுவனமும் உலகில் உள்ள பணக்காரர்கள், பிரபலங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு சட்ட ஆலோசனை வழங்கும் பணியைச் செய்து வருகின்றன. முக்கியமாக சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்ய அவர்களுக்கு உதவி வந்துள்ளன.
சமூக வலைத்தளங்களும் தப்பவில்லை
இந்தப் பட்டியலில் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக்கும் தப்பவில்லை. குறுகிய காலகட்டத்திற்குள் ரஷ்யாவின் நிதி நிறுவனங்களில் இருந்து எப்படி நிதி பெறப்பட்டது என்கிற விபரங்களும் இதில் வெளியாகி உள்ளது. ஆப்பிள், நைக் போன்ற நிறுவனங்கள் செய்துள்ள வரி ஏய்ப்பு ஆவணங்களும் இதில் அடக்கம்.
இதேபோல் பனாமா பேப்பர்ஸ்
சில ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய அளவில் முறைக்கேடான முறையில் சொத்து சேர்த்தவர்களின் பட்டியல் பனாமா பேப்பர்ஸ் என்கிற ஆவணம் மூலமாக வெளியாகியது. அதுவும் சட்ட நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட ஆவணங்களை வைத்தே விசாரணை செய்யப்பட்டு பின் வெளியானது.
பனாமா பேப்பர்ஸ் விசாரணை
பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான போது இதுகுறித்து விசாரணை நடத்த தனிக்குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அதில் 500க்கும் மேற்பட்ட இந்திய பிரபலங்களின் பெயர்கள் இருந்தன. விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அந்த வழக்கின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
பாரடைஸ் பேப்பர்ஸ் என்ன ஆகும்?
மத்திய அரசின் நேரடி வரி விதிப்புக்குழு இந்த விவகாரத்தில் இடம் பெற்றுள்ள இந்தியர்களின் கணக்குகளை ஆராயுமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. செபியும் வெளிநாட்டு நிறுவனங்களின் கணக்கை ஆராய உள்ளது. இந்த விசாரணை முறைப்படி நடக்கும் பட்சத்தில், நாட்டின் பிரபலங்களாக உள்ள பலர் முறைக்கேடு செய்தது வெளிச்சத்திற்கு வரும்.