பாரடைஸ் பேப்பர்ஸ்: வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில்சொத்து சேர்த்த 714 இந்திய பிரபலங்கள்!
டெல்லி : வரி ஏய்ப்பு செய்து கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி இருக்கும் பிரபலங்கள் குறித்து பாரடைஸ் பேப்பர்ஸ் என்கிற ஆவணம் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.
சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ரகசிய அறிக்கையில், உலகில் பல நாடுகளியும் வரி ஏய்ப்புச் செய்து அதன் மூலம் வெளிநாடுகளில் சொத்துகள் வைத்திருக்கும் நபர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன.
இதில் இந்தியாவில் இருந்து 700க்கும் அதிகமான பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமிதாப் பச்சன், சஞ்சய் தத்தின் மனைவி தில்னாஷின் தத், மத்திய இணையமைச்சர் ஜயந்த் சின்ஹா, பா.ஜ.க எம்.பி ரவிந்திர கிஷோர் சின்ஹா மற்றும் விஜய் மல்லையா உட்பட பலர் சிக்கி உள்ளனர்.
ஒரு கோடியே முப்பத்து நான்கு பக்கங்கள் உடைய இந்த வரி ஏய்ப்பு விவகாரத்தில் பெர்முடாவின் ஆப்பிள்பை நிறுவனம், சிங்கப்பூரின் ஏசியாசிட்டி நிறுவனம் ஆகியவை இந்தியா உட்பட உலகமெங்கிலும் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவியுள்ளது. சொத்துக்களும் வாங்கிக் கொடுத்துள்ளது.
ஆப்பிள்பை என்னும் நிறுவனத்திடம் இருந்து இந்த ஆவணங்கள் இரகசியமாக பெற்ற ஜெர்மன் பத்திரிகை நிறுவனம், புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கொண்டு இதன் மீது விசாரணை நடத்தி அறிக்கையைத் தயாரித்து உள்ளது. உலகமெங்கிலும் உள்ள வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வங்கியாளர்கள் மற்றும் இதர துறையைச் சேர்ந்தவர்கள் இந்த நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் மற்றும் வெளிநாடு கம்பெனிகளின் கணக்கை நிர்வகித்து வருகிறது. வரி செலுத்தாமல் தவிர்க்க அல்லது தப்பித்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கிகிறது. ரியல் எஸ்டேட் சொத்துகளை நிர்வகிப்பதிலும், குறைந்த வரியில் முதலீடுகளை செய்து அதன் மூலம் லாபம் ஈட்டித் தரும் வேலையைச் செய்கிறது.
மொத்தம் 180 நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் வெளியாகியுள்ளது. இதில் உள்ள எண்ணிக்கையின்படி இந்தியா 19-வது இடத்தில் உள்ளது. அதில் மொத்தமாக 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய நிறுவனங்கள் தான் இந்த நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையளாராக இருந்துள்ளன. ராஜஸ்தானின் சிகிஸ்டா ஹெல்த் கேர் நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
சர்வதேச அரசியல் பிரபலங்களான வில்பர் ரோஸ், கனடாவின் தலைமை நிதியளிப்பாளர், இங்கிலாந்து மகாராணி, முன்னாள் பாக்., பிரதமர் செளகத் அஜிஸ் உட்பட 120 முக்கிய பிரபலங்களின் பெயர்களும் இதில் வெளியாகி உள்ளன. இதனால் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வரும் 8-ந் தேதி பணமிழப்பு நடவடிக்கையால் கருப்புப்பணத்தை ஒழித்துவிட்டதை பா.ஜ.க கொண்டாட இருக்கும் நிலையில், வரி ஏய்ப்பு செய்து பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்து சேர்த்துள்ள விவகாரம் வரும் நாட்களில் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.