நிராகரித்த ஹிண்டால்கோவுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஏன்? பரேக் விளக்கமளிக்கவில்லை- சிபிஐ
1993-ஆம் ஆண்டிலிருந்து செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரித்துவரும் சிபிஐ, இதுவரை 14 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
இதில் 1993 முதல் 2004 வரை, மற்றும் 2006 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதில் தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்தின்மீது வழக்கு பதிவு செய்யும் முன்னர், அந்நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு செய்த அப்போதைய நிலக்கரித்துறை செயலாளர் பி.சி. பரேக்கிடம் தீவிர விசாரணையை சிபிஐ நடத்தியது. ஆனால் உரிய விளக்கத்தை அவரால் அளிக்க முடியவில்லை என்கிறது சிபிஐ வட்டாரங்கள்.
தொடக்கத்தில் ஹிண்டால்கோ நிறுவனத்தை நிராகரித்துவிட்டு பொதுத்துறை நிறுவனங்களான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் மற்றும் என்.எல்.சி-க்கு பி.சி. பரேக் ஒடிஷா மாநிலத்திலுள்ள தால்பிரா-2 மற்றும் தால்பிரா-3 நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்திருந்தார்.
ஆனால் தமது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு அந்த சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தார். இப்படி முடிவை மாற்றியது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க அவரால் முடியாததால் வழக்கில் அவர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பரேக்குக்கு ஆதரவளிப்போம் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.