தந்தையே மகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு - கேரள டிவி தொடர் தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை
திருவனந்தபுரம்: சொந்த மகளை தந்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், டிவி தொடர் தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த பரவூரைச் சேர்ந்தவர் சுதிர். இவரது 14 வயது மகள், ‘தனது தந்தையே தன்னைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக' போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
அப்புகாரின் பேரில் விசாரணை நாத்திய போலீசார், அந்த சிறுமிக்கு டி.வி. தொடர் தயாரிப்பாளர், நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை சுதிர், டி.வி. தொடர் தயாரிப்பாளர் மனோஜ் கோபி, புரோக்கர் ஜோஸ் மற்றும் மேரி டெய்சி உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு கொச்சி சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அதில், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தந்தை சுதிருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் அவரை ஓட்டல் அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த டி.வி. தொடர் தயாரிப்பாளர் மனோஜ் கோபி என்பவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய பென்னி ஆபிரகாமுக்கு 7 ஆண்டு சிறையும், புரோக்கர்கள் ஜோஸ், மேரி டெய்சி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.