என்ன கொடுமை... 50,000 ஆயிரம் கடனை அடைக்க 5 மாத குழந்தை விற்பனை... பெற்றோர் கைது!
கான்பூர்: வாங்கிய கடனை அடைக்க முடியாத தம்பதிகள் தங்களது 5 மாதக் குழந்தையை விற்று கடனை அடைத்த கொடுமை உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. தம்பதியர் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே உள்ளது பபுபுர்பா பகுதி. இங்கு காலித் மற்றும் சாயிதா என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். காலித், வீட்டின் அருகே தேநீர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் செலவிற்காகவும், கடையை மேற்கொண்டு நடத்துவதற்காகவும் வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
இவர்களால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. மிகவும் கஷ்டத்தில் இருந்த நேரத்தில் கடன் கொடுத்தவர் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் விழி பிதுங்கிப் போன தம்பதியர் பைசான் என்ற வியாபாரியிடம் தங்களது 5 மாதக் குழந்தையை 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். பின்னர், வட்டிக்கு பணம் கொடுத்தவருக்கு கொடுக்க வேண்டிய கடனையும் திருப்பி கொடுத்துவிட்டனர்.
இந்நிலையில், குழந்தை எங்கே என்று கேட்பவர்களுக்கு சந்தேகம் எதுவும் வந்துவிடாமல் இருக்க குழந்தை காணவில்லை என்று போலீசாரிடம் தம்பதியர் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஜிகர்கட்டி என்ற பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பைசான் நிற்பதை கண்டு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பைசானிடம் போலீசார் நெருக்கடி கொடுத்து விசாரித்த போது காலித் மற்றும் சாயிதா குழந்தையை விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வீட்டிலிருந்த 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
வாங்கிய கடனை அடைக்க தம்பதியர் 5 மாத குழந்தையை விற்ற இந்த சம்பவம் கான்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.