For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகனின் கிரிக்கெட் பெட்டிங் பெற்றோரின் உயிரை பறித்தது.. இந்தியா தோற்றதால் தற்கொலை!

Google Oneindia Tamil News

குண்டூர்: உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் முரிக்கிபுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிபாபு (58). இவரது மனைவி பெயர் நாகேந்திரம் (55). இத்தம்பதியின் ஒரே மகன் ஸ்ரீஹரி கிரிக்கெட் ரசிகர். ஒவ்வொரு முறை கிரிக்கெட் போட்டி நடக்கும் போது, கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாம். பெற்றோர் கண்டிப்பையும் மீறி இதனை அவர் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா ஜெயிக்கும் என அவர் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியுள்ளார். ஆனால், நேற்றைய அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

இதனால், ஸ்ரீஹரியை விட அவரது பெற்றோர் பெரும் சோகத்திற்கு ஆளானார்கள். மகன் தலைமறைவாகி விட்டால், சூதாட்டத்திற்காக அவர் கடன் வாங்கிய இடங்களில் நாம் தான் பதில் சொல்ல வேண்டும் என அவர்கள் பயந்தனர். எனவே, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

நோய் காரணமாக தனது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய ஸ்ரீஹரி, உடனடியாக அவர்களது சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அதற்குள்ளாக அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீஹரியைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
In Andhra the parent of a youngster has committed suicide, as their son had involved in cricket betting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X