5 நிமிடம்தான் உங்களை சந்தித்தேன்.. ரபேல் குறித்து எதையும் பேசவில்லை.. ராகுலுக்கு பாரிக்கர் கடிதம்
பனாஜி: 5 நிமிடங்கள் மட்டுமே உங்களுடன் பேசினேன். அந்த நேரத்தில் ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து நான் எதையும் பேசவில்லை என கோவா முதல்வரும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் கடிதம் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ரபேல் விமான கொள்முதலை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடம் வழங்காமல் 10 நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு நரேந்திர மோடி அரசு ஒதுக்கியதில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக லோக்சபாவில் அனல் பறக்கும் கேள்விகளை ராகுல் எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமானது. மேலும் ரபேல் விமான கொள்முதல் தொடர்பான ஆவணங்களை முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரின் படுக்கை அறையில் இருப்பதாக ராகுல் ஆடியோ ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார்.
அன்றாட பணிகள்
இந்த நிலையில் கணைய பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் மனோகர் பாரிக்கருக்கு மூக்கில் உணவுக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதனுடையே அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பூரண குணமடைய வாழ்த்து
இந்த நிலையில் நேற்று கோவா சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சட்டசபை வளாகத்துக்கு சென்று பாரிக்கரை சந்தித்து நலன் விசாரித்தார். விரைவில் அவர் பூரண குணமடையவும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
பாரிக்கர் கருத்து
இந்த நிலையில் பனாஜியில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கூறுகையில் பாரிக்கரிடம் உடல்நலம் குறித்து விசாரித்த போது ரபேல் குறித்தும் பேசினேன். அப்போது மோடிக்கும் அம்பானிக்குமான புதிய ஒப்பந்தத்தை வைத்து தான் எதையும் செய்யவில்லை என பாரிக்கர் கூறியதாக ராகுல் தெரிவித்தார்.
அரசியல் ஆதாயம்
இதனால் அதிர்ச்சி அடைந்து இரு பக்கங்கள் கொண்ட கடிதத்தை பாரிக்கர் எழுதியுள்ளார். அதில் நேற்றைய தினம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி (ராகுல்) என்னை பார்த்து உடல்நலம் விசாரித்தீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் என்னை சந்திக்க வந்ததால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
செய்திகள்
ஆனால் ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அது குறித்த எந்த தகவலும் என்னிடம் இல்லை என்றும் நான் கூறியதாக செய்திகள் வெளியானதை கண்டு வேதனை அடைந்தேன். அரசியல் ஆதாயத்துக்காக என்னுடனான சந்திப்பை நீங்கள் பயன்படுத்திக் கொண்டது எனக்கு புரிந்தது.
மலிவான அரசியல்
உங்களுடனான 5 நிமிட சந்திப்பில் ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து நான் எதையும் பேசவில்லை. ரபேல் விமான ஒப்பந்தம் விதிமுறைகளின்படிதான் நடந்து வருவதாக நான் அவ்வப்போது கூறி வருகிறேன். உண்மைக்கு மாறான தகவலை நான் கூறியதாக கூறி மலிவான அரசியலை தேடும் நோக்கத்திலேயே என்னை சந்தித்துள்ளீர்கள்.
உடல்நலம்
உயிருக்கு அச்சுறுத்தும் நோயால் நான் அவதிப்படுகிறேன். கோவா மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். நான் விரைவில் நலம் வாழ்த்துகளை நீங்கள் கூறியது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கம் என நினைத்தேன். ஆனால் தற்போதுதான் உங்களது நோக்கம் புரிகிறது. இனியாவது நாம் என்ன பேசினோம் என்ற உண்மையை சொல்வீர்கள் என நம்புகிறேன். அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்திப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார்.