ஈராக் மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியே பாரீஸ் தாக்குதல்: உ.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு
லக்னோ: சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பதிலடிதான் உலகை உலுக்கிய பாரீஸ் தாக்குதல் என்று உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல இடங்களில் ஊடுருவிய தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை கடந்த வெள்ளியன்று நிகழ்த்தினர். இத்தாக்குதலில் 127 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து உத்தரப்பிரதேச மூத்த அமைச்சர் ஆசாம் கான் கூறியுள்ளதாவது:
சிரியா, ஈராக்கில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பதிலடியாகத்தான் பாரீஸ் தாக்குதலை கருத வேண்டும். தீவிரவாத தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கதுதான்.
அதேநேரத்தில் இத்தகைய தீவிரவாத தாக்குதல்களுக்கான அடிப்படை காரணம் என்ன என்பதையும் நாம் உணர வேண்டும். அமெரிக்காவும் அதன் மேற்குலக நட்பு நாடுகளும் சிரியா, லிபியா, ஈராக், ஆப்கானில் தங்களது சுயநலத்துக்காக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக் கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவித்து அவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்தனர். அந்நாடுகளில் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பதற்காக அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டன.
இதன்மூலம் கிடைத்த பணத்தில்தான் பாரீஸ் போன்ற நகரங்கள் ஒயின், பார்ட்டி கலசாரம் என கொளுத்து கிடக்கிறது. இந்த நாடுகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியே பாரீஸ் தாக்குதல் சம்பவம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆசாம் கான் கூறியுள்ளார்.