பிரான்ஸ் பத்திரிக்கை மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் மணி சங்கர் அய்யர்
டெல்லி: ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம்கள் அப்பாவிகளா இல்லையா என்று பிரித்துப் பார்க்காமல் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் பாரீஸ் தீவிரவாத தாக்குதல் உள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் காங்கிரஸ் அய்யரின் கருத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பது போன்று உள்ளது.
பாரீஸ் தாக்குதல் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நீங்கள் அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதற்கு வலியவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று இல்லை. ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கியபோது வீடுகள் சேதமடைந்தன, குழந்தைகள் பலியாகின. இதற்கு எதிர்வினை ஏற்படும் என்று தெரிந்தது.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் செல்லும் வழியைப் பார்க்கையில் இது போன்று தான் எதிர்வினைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். அது தற்போது நடக்கிறது. அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதை பிரான்ஸ் கண்டறிய வேண்டும்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினை எதிர்பார்க்கப்பட்டது. 9/11 தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போர் துவங்கப்பட்டதில் இருந்து முஸ்லீம் அப்பாவிகளா இல்லையா என்பதை கூட பார்க்காமல் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதை தான் அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்துள்ளது. மேலும் தற்போதும் சிரியாவிலும் செய்ய உள்ளது. அதனால் எதிர்வினை ஏற்படத் தான் செய்யும்.
முஸ்லீம் பெண்கள் புர்கா அணியக் கூடாது என்கிறார்கள். இது முஸ்லீம்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் உள்ள வேற்றுமையில் ஒற்றுமையை மேற்கத்திய நாடுகள் கற்கவில்லை என்றார்.
பாரீஸ் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அய்யர் இவ்வாறு பேசியுள்ளார். அய்யரின் கருத்துக்கு பாஜக, ஆத் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.