பாலியல் தொல்லை கொடுப்பதாக கேரள பாதிரியார் மீது பெண் பகீர் குற்றச்சாட்டு
பாதிரியார் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மத்திய அரசு பெண் ஊழியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள பாதிரியார் இமெயில் மூலம் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோழிக்கோட்டை அடுத்த நடக்கவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மத்திய அரசு ஊழியராக கொல்கத்தாவில் பணிபுரிந்து வருகிறார். கணவரை இழந்த இவர் தனது மகளின் பிறந்த நாளுக்காக நடக்கவில்லில் உள்ள சர்ச் பாதிரியாரிடம் தனது மகளுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யும்படி கேட்டுள்ளார்.
பாதிரியாரும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு தகாத மின்னஞ்சல்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், பாதிரியாரை பல முறை எச்சரித்தும், தனது போக்கை மாற்றாமல் தொடர்ந்து மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார்.
விவகாரம் பெரிதாவதை உணர்ந்த பெண், மலபார் மாவட்டத்தில் உள்ள தென்னிந்திய தேவாலய அமைப்பில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காமால் அவரை காப்பாற்றவே முயற்சிப்பதாகவும் அந்தப்பெண் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து பாதிரியார் அனுப்பிய மின்னஞ்சல் நகலுடன் பிஷப்பிடம் புகார் அளித்ததன் பேரில் அவர் நிலம்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறிய அந்தப் பெண் ஒரு மாதத்தில் நடக்கவு தேவாலயத்துக்கு திரும்பிய அந்த பாதிரியார் மீண்டும் பாலியல் தொல்லையை தொடர்ந்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அந்த பாதிரியார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.