அனைத்து விமான நிலையங்களிலும் நவ.21 வரை பார்க்கிங் கட்டணம் ரத்து
விமான நிலையங்களில் நவம்பர் 21-ம்தேதி நள்ளிரவு வரை பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் 21-ந் தேதி வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் சில்லறை நோட்டுக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர்.
வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்ற போதிலும் எல்லோரும் ஒரே நேரத்தில் வங்கிகளுக்கு திரண்டு வருவதால் கூட்டநெரிசல் ஏற்படுகிறது. தற்சமயம் ஓரளவிற்கு இந்த பிரச்சினையை சமாளிக்க மருத்துவமனை, குடிநீர், மின்சாரம் மற்றும் அரசு வசூலிக்கும் உள்ளிட்ட பல்வேறு வரிகள் என அத்யாவசிய தேவைகளுக்கு பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்தது.
அதேபோல் நாடு முழுவதிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 18-ம்தேதி நள்ளிரவு வரையில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களில் நவம்பர் 21ம் தேதி நள்ளிரவு வரை பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
We heard you! To facilitate smooth movement, collection of parking charges at all airports suspended till midnight of 21 Nov! #AirSewa
— Jayant Sinha (@jayantsinha) November 14, 2016
பயணிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 21-ம் தேதி வரை அனைத்து விமான நிலையங்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்கா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.