10ம் வகுப்பு தேர்வில் 95% மார்க் வாங்கிய தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் மகன்
ஸ்ரீநகர்: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட முகமது அப்சல் குருவின் மகன் கலிப் குரு 10ம் வகுப்பு தேர்வில் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது அப்சல் குருவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.
அவரது குடும்பம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசித்து வருகிறது. அவரின் மகன் கலிப் குரு 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதில் கலிப் குரு 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அவர் 5 பாடங்களிலும் ஏ1 கிரேட் வாங்கியுள்ளார். அப்சல் குருவின் மகன் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியுள்ளார் என்று மக்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று கூறி வருபவர்களோ கலிப் குருவை பாராட்டியுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை சேர்ந்த தபிஷ் மன்சூர் கான் என்ற மாணவர் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.