நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது- பிரதமர் மோடி உரை
டெல்லி: பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. பிரதமர் மோடி, புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை மக்களவையில் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
இந்த மழைக்கால கூட்டத்தொடரில், ஜிஎஸ்டி உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இன்று தொடங்கியுள்ள நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், இன்று தொடங்கி வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் 20 - 25 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்தக் கூட்டத் தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அதேசமயம், ராஜ்யசபாவில் 11 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், 45 மசோதாக்கள் நாடாளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு ராஜ்யசபாவிற்கு சென்றுள்ளது. ஜிஎஸ்டி, லஞ்ச ஒழிப்பு, பினாமி சொத்து பரிவர்த்தனைத் தடை உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்களை இந்த முறை எப்படியும் தாக்கல் செய்து விடும் நோக்கில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
ஜிஎஸ்டி மசோதா
ஜிஎஸ்டி மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சில பிராந்தியக் கட்சிகள் விலக்கிக் கொண்டதால், மழைக்கால கூட்டத் தொடரிலேயே, ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது.
அனலை கிளப்ப திட்டம்
அதேசமயம், என்எஸ்ஜி உறுப்பினர் தோல்வி, கைரானா விவகாரம், காஷ்மீர் விவகாரம், அருணாச்சல் விவகாரம், பொதுவான ஒரே சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை இந்த கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் கையில் எடுத்து அமளியில் ஈடுபட வாய்ப்புள்ளது. மேலும், மசோதாக்களை வழக்கம் போல் முடக்கவும் வாய்ப்புள்ளது.
சுமூக நடத்த கோரிக்கை
இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம், நேற்று நடைபெற்றது. அதன்பின்னர், நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறவேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்தன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
மோடி கோரிக்கை
ஜிஎஸ்டி மசோதா மிக முக்கியம். அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இது, மத்திய அரசு பெருமை தேடுவதற்காக அல்ல; நாட்டின் நலனே முக்கியம். மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
குலாம் நபி ஆசாத்
அதேபோல், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் எந்தவொரு மசோதாவையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்யவில்லை. தகுதி அடிப்படையில் மசோதாக்களுக்கு ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
தகுதி அடிப்படையில் ஆதரவு
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கலைக்க, மத்திய அரசு அனைத்து தந்திரங்களையும் கையாளுகிறது. அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என, பிரதமர் மோடி கூறுகிறார்.ஆனால், மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக,அவர்களின் கூட்டணிக் கட்சியான அகாலிதளமே புகார் கூறுகிறது. மசோதாக்களின் முக்கியத்துவத்தை பொறுத்தே ஆதரவளிக்க முடியும் என்றும் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.