நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ல் தொடங்குகிறது
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் ஜூலை 18-ந் தேதி கூட இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி கூடியது. அன்றைய கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அதன்பிறகு பிப்ரவரி 25-ந்தேதி ரயில்வே பட்ஜெட்டும், 29-ந்தேதி 2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வாக நடத்தப்பட்டது. முதலாவது அமர்வு பிப்ரவரி 22-ந்தேதி முதல் மார்ச் 16-ந்தேதி வரையும் 2-வது அமர்வு ஏப்ரல் 25-ந்தேதி முதல் மே 13-ந்தேதி வரையும் நடைபெற்றன.
ஜூலை 18-ல் தொடக்கம்
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை வருகிற ஜூலை மாதம் 18-ந்தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதம் 13-ந்தேதி வரை இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவையின் நாடாளுமன்ற விவகார கமிட்டி கூடி வரும் 29-ந் தேதி கூடி முடிவெடுக்க உள்ளது.
ஜிஎஸ்டி மசோதா
இந்த கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நீண்ட காலமாக நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.
திருத்திய அரசு
எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நிறைவேற்ற முடியவில்லை. மசோதாவில் பல்வேறு திருத்தங்களை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு மசோதாவில் திருத்தங்கள் செய்துள்ளது.
ஆதரவு கிடைக்குமா?
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒரு மித்த ஆதரவை திரட்டும் முயற்சியில் மூத்த மத்திய அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். லோக்சபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்த போது ராஜ்யசபாவில் போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியான அதிமுக மேலும் திருத்தங்களைக் கோரி வரூகிறது. அண்மையில் நடந்த சட்டசபை தேர்தல்களுக்குப் பின் ராஜ்யசபாவில் பா.ஜ.க பலம் சற்று அதிகரித்துள்ளது. இதனால் எதிர்க் கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயற்சித்து வருகிறது. நிலுவையில் உள்ள பல மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.