லலித் மோடியிடம் வாங்கிய பணம் எவ்வளவு? சுஷ்மா பதிலளித்தால் நாடாளுமன்றம் இயங்கும்: ராகுல் வார்னிங்
டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் நாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்தால்தான் நாடாளுமன்றம் இயங்கும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
ஐ.பி.எல். தலைவர் லலித் மோடிக்கு உதவியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிமயமாக பேசினார்.
அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஒரு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா என அவர் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட்டார். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கி வருகிறது.
ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடியிடம் தனது குடும்பம், மகள், கணவர் பெற்ற பணம் எவ்வளவு என்பதை சுஷ்மா ஸ்வராஜ், நாட்டுக்கு சொல்ல வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, லலித் மோடி விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? என்பதை சுஷ்மா வெளிப்படுத்தினால் நாடாளுமன்றம் செயல்படும் என்றார்.
மேலும் நாடாளுமன்றம் நடைபெற வேண்டும் என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் நாங்கள் அடிப்படை பிரச்சனைகளை எழுப்ப வேண்டும்; சுஷ்மா மற்றும் ராஜஸ்தான் முதல்வர் சட்டத்திற்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. நமது பிரதமர் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கவேண்டும் என்பதை அவசியமாக கொள்ளவில்லை. ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் கிரிமினல் லலித் மோடி இடையே நடைபெறும் வர்த்தகம் தொடர்பான உண்மையையும் பிரதமர் மோடி முற்றிலுமாக நிராகரிக்கிறார்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.