இந்திய கப்பல் படை மாஜி அதிகாரியை கைது செய்த பாக்.! பத்திரமாக மீட்க சுஷ்மாவிடம் பாரிக்கர் கோரிக்கை
கோவா: இந்திய உளவு அதிகாரி என்ற சந்தேகத்தின்பேரில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவை மீட்க உதவுமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளேன் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: குல்புஷன் ஜாதவ், 2013ல் இந்திய கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது ஈரான் நாட்டை சேர்ந்த சபார் துறைமுக நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வந்தார். அவர் எந்த அரசு துறையிலும் பணியாற்றவில்லை.
அப்பாவியான ஜாதவ் மீது உளவாளி என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனவே அவரை பத்திரமாக மீட்டு தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறு மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
இதனிடையே, ஈரானில் இருந்து தீவிரவாதிகளால் கடத்தி வரப்பட்டு, பாகிஸ்தானில் ஜாதவ் விடப்பட்டிருக்கலாம் என்று ஒரு தகவலும் பரவியுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள கிளர்ச்சியாளர்களை ஒருங்கிணைப்பதற்காக, இந்திய உளவு அமைப்பான 'ரா' சார்பில் ஜாதவ் பாகிஸ்தான் வந்துள்ளதாக அந்த நாடு குற்றம்சாட்டி அவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.