ஸ்மிருதி இரானியை கட்டம் கட்டிய பாஜக ஊழியர்..'பச்' இப்படி ஒரு கேள்வியா?அதுவும் கூட்டத்திற்கு நடுவில்?
காந்திநகர்: குஜராத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலையுயர்வு குறித்து பாஜக உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக உறுப்பினர்கள் கூட விலையுயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளது.
ஏற்கெனவே ராகுல்காந்தி ஆரத்தி எடுத்த விவகாரத்தில் தவறான கருத்தை கூறியதால் காங்கிரஸ் தொண்டர்கள் ஸ்மிருதி இரானிக்கு டிவிட்டரில் சரமாரியாக கேள்வியெழுப்பி இருந்தனர். இந்நிலையில் தற்போது மற்றொரு சம்பவத்தில் அவர் சிக்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.
குஜராத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு! தேர்தல் பணியில் இருந்த 2 வீரர்கள் பலி! சக வீரரே வெறிச்செயல்
வீடியோ
குஜராத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பாஜக பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் 'ஸ்மிருதி இரானி' பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அங்கிருந்த பாஜக பெண் ஊழியர் ஒருவர், திடீரென ஸ்மிருதி இரானியை பார்த்து கேள்வியெழுப்ப தொடங்கிவிட்டார். அதாவது, "எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர். பணவீக்கம் அதிகரித்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது. இந்த விலையுயர்வை குறைத்தீர்கள் எனில் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்" என்று கூறியிருந்தார். சொந்த கட்சிக் கூட்டத்திலேயே கட்சி குறித்து விமர்சனங்களை எதிர்பார்க்காத ஸ்மிருதி இரானி வாயடைத்து நின்றுவிட்டார். தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கேள்வி
இந்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ், "பணவீக்கத்தாலும், விலையுயர்வாலும் பாஜக தொண்டர்கள் கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கேஸ் விலையுயர்வு குறித்து முறையிட்டபோதும் அவர் சிரித்துக்கொண்டே இருக்கிறார். சிலிண்டர் விலை ரூ.400 ஆக இருந்தபோது இதே ஸ்மிருதி இரானி வீதியில் இறங்கி போராடினார். ஆனால், இன்று அவர் மௌனமாக இருக்கிறார்" என்று விமர்சித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக இன்னும் பதிலளிக்கவில்லை. ஏற்கெனவே ராகுல்காந்தி ஆரத்தி எடுத்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் பதிவிட்டிருந்த ஸ்மிருதி இரானி டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர்களால் கடுமை விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில் தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்.
விரட்டியடிப்பு
குஜராத்தில் கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டிருந்தாலும், அந்த தேர்தலில் காங்கிரஸை விட வெறும் 10% வாக்குகளையே கட்சி கூடுதலாக பெற்றிருந்து. எனவே இந்த தேர்தலில் எப்படியாவது தனது வாக்கு வங்கியை அதிகரித்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என முழு முயற்சியில் கட்சி களம் இறங்கி இருக்கிறது. ஆனால், கடந்த சில நாட்களாக பாஜக வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு செல்கையில் அங்கு பொதுமக்களால் தொடர்ந்து விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நேற்று, அம்ரேலி மாவட்டத்தில் உள்ள 'தாரி' சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் 'ஜேவி ககாடியா' தொகுதி மக்களிடம் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்.
தேர்தல்
இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் ஆம் ஆத்மியும் பாஜகவுக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1ம் தேதியும் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையின்மை, மதக்கலவரங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னோட்டம்தான் ஸ்மிருதி இரானி பங்கேற்ற கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர்களே கேள்வியெழுப்பியுள்ள சம்பவம் அரங்கேறியிருப்பது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.