ராஜ்குமார் மனைவி பர்வதம்மா மரணம் எதிரொலி.. பெங்களூரில் பள்ளிகள் - தியேட்டர்கள் மூடல்
பெங்களூரு: பர்வதம்மா ராஜ்குமார் மறைவைத் தொடர்ந்து பெங்களூரில் தியேட்டர்கள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன. அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சதாசிவம் நகர் பகுதியில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா இன்று காலை மரணமடைந்தார். அவரது உடல் சதாசிவம் நகரில் உள்ள மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பர்வதம்மாவின் உடல் காண்டீரவா ஸ்டேடியத்தில் கணவர் ராஜ்குமார் நினைவிடத்திற்கு அருகிலேயே இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
பர்வதம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெங்களூரில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல மைசூரிலும் தியேட்டர்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முழுவதும் இன்று திரைப்படத் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பர்வதம்மாவின் உடல் வைக்கப்பட்டுள்ள சதாசிவம் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிற பகுதிகளைப் பொறுத்தவரை, பாதுகாப்பு இருப்பதாக உணர்ந்தால் பிள்ளைகளுக்கு பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.