கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா மரணம்
பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா ராஜ்குமார் பெங்களூரில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 78.
பெங்களூரு எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் உடல் நலம் குன்றிய நிலையில் பர்வதம்மா அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.40 மணியளவில் பர்வதம்மா மரணமடைந்தார். அவரது உடல் மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக பர்வதம்மாவின் உடல் பார்வைக்கு வைக்கப்படும். பர்வதம்மா தனது கண்களைத் தானம் செய்துள்ளார் என்பதால் அவரது கண்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவரது கணவர் மறைந்த ராஜ்குமாரின் கண்களும் கூட தானம் செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
பர்வதம்மாவின் மறைவைத் தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னட மக்கள் மத்தியில் ராஜ்குமாரைப் போலவே பர்வதம்மாவுக்கும் செல்வாக்கு அதிகம். அவரது மறைவுக்கு பல்துறைப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாலிகிராமா என்ற கிராமத்தில் 1939ம் ஆண்டு பிறந்தவர் பர்வதம்மா. இவரது பெற்றோர் அப்பாஜி கவுடா -லட்சுமம்மா. தனது 13வது வயதில் ராஜ்குமாரை மணந்தார். திருமணத்திற்குப் பின்னர் ராஜ்குமாரும், இவரும் இணைந்து வஜ்ரேஸ்வரி கம்பைன்ஸ் (பூர்ணிமா என்டர்பிரைசஸ்) என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினர்.
ராஜ்குமார் ஹீரோவாக நடித்த திருமூர்த்தி படம்தான் பர்வதம்மா தயாரிதத முதல் படமாகும். இவரது 3 சகோதரர்களும் கூட திரைப்படத் தயாரிப்பாளர்கள்தான். 80 படங்களுக்கும் மேல் தயாரித்துள்ளார் பர்வதம்மா. தனது பட நிறுவனம் மூலமாகவே தனது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரையும் ஹீரோக்களாக்கியவர்.