ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: அமைச்சர் சுரேஷ் பிரபு
டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 23ம் தேதி துவங்கிறது. 25ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கான பணியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விபத்துகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. 2016-2017ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒரு ரயில் விபத்து கூட நடக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம் ஆகும்.
ரயில் விபத்துகளை தவிர்க்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பங்களை வைத்து சிக்னல்களை மேம்படுத்துதல், தண்டவாளங்களை பராமரித்தல் ஆகியவற்றை செய்து வருகிறோம். உலகிலேயே ஜப்பான் ரயில் சேவை சிறப்பாக உள்ளதால் ரயில் பாதுகாப்பை மேம்படுத்த அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இந்த நிதியாண்டில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை மட்டும் நம்பாமல் விளம்பரம் மூலமும் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 400 ரயில் நிலையங்களை சீரமைக்க திட்டமிட்டுள்ளோம்.
சரக்கு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் வருவாய் குறைந்துள்ளது. இதற்கு சர்வதேச அளவில் பொருளாதாரம் சரிந்துள்ளதே காரணம் என்றார்.