இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்பான பயணத்திற்கு முக்கியத்துவம்: மல்லிகார்ஜூன கார்கே
டெல்லி: நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே.
பேருந்தோடு ஒப்பிடுகையில் கட்டணம் மற்றும் இடவசதி, கழிப்பிட வசதி மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகளால் மக்கள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகிறார்கள். ஆனால், சாலை விபத்துக்கள் போலவே சமீபகாலமாக ரயில் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் ரயிலிலும் பயணம் செய்ய அஞ்சும் நிலையே ஏற்பட்டுள்ளது.
மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே.
இதோ, அது தொடர்பாக அவர் வெளியிட்ட முக்கிய அம்சங்களாவன :-
ஆளில்லா லெவல் கிராசிங்குகள்....
நாடு முழுவதும் 5,400 ஆள்இல்லா லெவல் கிராசிங்குகள் இருந்தன. இதில் 2,310 லெவல் கிராசிங்குகளில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 3,090 லெவல் கிராசிங்குகளில் பெரும்பாலான கிராசிங்குகளில் சாலை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வசதிகள் செய்ய முடியாத சில லெவல் கிராசிங்குகள் மூடப்பட்டு உள்ளன.
எச்சரிக்கை...
லெவல் கிராசிங்குகளில் மேம்படுத்தப்பட்ட ஒலி-ஒளி எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்படும்.
தீ விபத்தை தடுக்க...
ரயிலில் தீப்பிடிப்பதை கண்டு அறிவதற்காக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பரீட்சார்த்த அடிப்படையில் இரு பெட்டிகளில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டன. இது வெற்றிகரமாக அமைந்ததால் இந்த கருவிகள் மற்ற பயணிகள் ரயில்களிலும் பொருத்தப்படும்.
மோதுவதைத் தடுக்க....
ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதை தடுக்க வகை செய்யும் கருவி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பரீட்சார்த்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கருவி ரயில்களில் பொருத்தப்படும்.
இண்டக்சன் அடுப்பு....
ரயில்களில் உணவு தயாரிக்கும் பெட்டியில் சமையல் கியாசை பயன்படுத்துவதற்கு பதிலாக இண்டக்சன் அடுப்பு பயன்படுத்தப்படும்.
தீயணைப்புக் கருவிகள்....
ரயில் பெட்டிகளின் தரம் மேம்படுத்தப்படும். ரயில் பெட்டிகளில் எளிதில் எடுத்துச் சென்று கையாளும் தீயணைப்பு கருவிகள் வைக்கப்படும்.
செலவில் பங்கு....
செலவை பகிர்ந்து கொண்டு ரயில்வேயில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தில் பங்கு கொள்ள கர்நாடகம், மராட்டியம், ஜார்கண்ட், ஆந்திரா, அரியானா ஆகிய மாநில அரசுகள் சம்மதம் தெரிவித்து உள்ளன.
வேலைவாய்ப்பு...
கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் குரூப் ‘சி' பிரிவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேருக்கும், குரூப் ‘டி' பிரிவில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது' என இவ்வாறு பல முக்கிய அம்சங்கள் ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.