தூங்கக் கொடுத்த பெட்ஷீட்டை திருடிச் செல்லும் ஏ.சி.கோச் பயணிகள்.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
ரயில்களில் திருடப்படும் பொருட்களின் மதிப்பு குறித்து மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
டெல்லி : நீண்ட தூர பயணியர் ரயில்களில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 81 ஆயிரம் படுக்கை விரிப்புகள் திருட்டு போயிருப்பதாக மேற்கு ரயில்வே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
நீண்டதூரம் பயணம் செய்யும் ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு, படுக்கை விரிப்புகள், தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், அவற்றை அனைத்து பயணிகளும் முறையே திருப்பிக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
படுக்கை விரிப்புகள் திருட்டு:
அதன்படி, கடந்தாண்டு மட்டும் இவ்வாறு 81 ஆயிரத்து 736 படுக்கை விரிப்புகள் பயணிகளால் திருடிச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. படுக்கை விரிப்புகள் மட்டுமின்றி 5,038 தலையணைகள் மற்றும் 7,043 போர்வைகளும் திருடு போய் இருப்பதாக, மேற்கு ரயில்வே கூறியுள்ளது.
கழிவறை பொருட்கள்:
இது போன்ற திருட்டுச் சம்பவங்கள் ரயிலின் ஏசி பெட்டிகளில் மட்டும் நடைபெறுவதில்லை. சாதாரண பெட்டிகளில் மின் விசிறிகள், ஜன்னல் கம்பிகள் மற்றும் கழிவறைகளில் உள்ள குழாய்கள், குவளைகள், பயன்பாட்டில் இல்லாத தண்டவாளங்கள் உட்பட, பல பொருட்களும் திருடு போகின்றன. இப்படியாக இந்திய ரயில்வேயில் கடந்த மூன்று ஆண்டுகளில் திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ 4 ஆயிரம் கோடி எனக் கூறப்படுகிறது.
துண்டுகள்:
இது தொடர்பாக மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி, சுனில் உதாசி கூறுகையில், "மேற்கு ரயில்வேயில், 2017 - 18ல் மட்டும், 1.95 லட்சம் துண்டுகள்; 81 ஆயிரத்து, 736 படுக்கை விரிப்புகள்; 55 ஆயிரத்து, 573 தலையணை உறைகள் திருடு போயுள்ளன.
குழாய்கள்:
மேலும், 5,038 தலையணைகள், 7,043 போர்வைகள், 200 குவளைகள், 1,000 குழாய்கள் ஆகியவை திருடு போய் உள்ளன; இவற்றின் மொத்த மதிப்பு, 3 கோடி ரூபாய்" எனத் தெரிவித்துள்ளார்.