இனி எங்கிருந்தும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்.. புதிய வசதியுடன் வரும் ''பாஸ்போர்ட் சேவா'' ஆப்!
இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தும் பாஸ்போர்ட் பெறும் வகையில், பாஸ்போர்ட் சேவா செயலியில் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தும் பாஸ்போர்ட் பெறும் வகையில், பாஸ்போர்ட் சேவா செயலியில் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களும் அதிக அளவில் பயனடைவார்கள் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பொறுப்பேற்றதில் இருந்தே அந்த துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு வெளியுறவு விவகாரங்கள் மிகவும் எளிமையாக நடக்கும் வகையில் நிறைய வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
அந்த வகையில் இன்று சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பெண்களும், பணிபுரியும் நபர்களும் பயன் அடையும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இனி திருமணமான பெண்கள் தங்களது திருமண சான்றிதழை கொடுத்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆன தகவலை மட்டும் தெரிவித்தால் போதும். அதேபோல் விவாகரத்து ஆன பெண்கள், முன்னாள் திருமணத்தின் விவரங்களை அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
அதேபோல் பாஸ்போர்ட் பெறுவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் ஆண்ட்ராய்ட் செயலியான பாஸ்போர்ட் சேவா மூலம் இன்னும் எளிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும் என்று கூறியுள்ளார். அதன்படி, இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் சரியான தகவல்களை கொடுத்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும்.
நாம் அந்த செயலியில் எந்த விலாசம் கொடுத்து இருக்கிறோமோ, அந்த விலாசத்திற்கு போலீஸ் விசாரணை செய்ய வருவார்கள். இதனால் பாஸ்போர்ட் வாங்க அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. அதேபோல் நாம் கொடுத்து இருக்கும் விலாசத்திற்கே பாஸ்போர்ட் வந்து சேரும்.
இது பாஸ்போர்ட் வாங்கும் வேலையை மிகவும் எளிதாக்கும். மக்களும் அதிக அளவில் பயனடைவார்கள் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.