பதஞ்சலி நூடுல்ஸ் விரைவில் முதலிடத்தை பிடிக்கும்: யோகாகுரு பாபா ராம்தேவ் நம்பிக்கை !
மும்பை: வெளிநாட்டு பிராண்டுகளை வீழ்த்தி விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் முதலிடத்தை பிடிக்கும் என்று யோகாகுரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் மீகு வழக்கு தொடரப்பட்டது. மேகி நூடுல்ஸுக்கு பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.
மேகி நூடுல்ஸ் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தனது உணவு மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி மூலம் சத்தான் நூடுல்ஸை தயாரித்து கொடுப்பதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக இடம்பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மும்பையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியது:
பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸ் விரைவில் இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக மாறும். தற்போது, 100 டன்கள் வரையில் தயாரித்து வருகிறோம். விரைவில் 300 முதல் 500 டன்கள் வரை தயாரிப்பை அதிகரிக்க இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் இருந்து பணத்தை வெளியே எடுத்துக் கொண்டிருக்கின்றன. விரைவில் வெளிநாட்டு பிராண்டுகளை விட பதஞ்சலி அதிக வரவேற்பை பெறும்.
குறைந்த விலையில் பலதரப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்துவதால் கொஞ்சம் கொஞ்சமாக நுகர்வோர் சந்தையில் பதஞ்சலி முக்கிய இடத்தை பிடிக்கும். இதில் கிடைககும் 100 சதவீத லாபமும் சமூக சேவைக்காகவே பயன்படுத்தப்படும். பன்னாட்டு நிறுவனங்களை விட குறைந்த செலவிலேயே நுகர்பொருட்களை பதஞ்சலி உற்பத்தி செய்கிறது. எனவே, பொருட்களின் விலையும் குறைவாகவே இருக்கும். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை லாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லாபம் அனைத்தும் சமூக சேவை பணிகளுக்காகவே பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.