காந்தி, பட்டேல் பூமியில் வன்முறை வேண்டாம்: மோடி வேண்டுகோள்
டெல்லி: மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பூமியில், வன்முறைக்கு இடம் தராமல், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும் என்று குஜராத் மாநிலத்தில் ஆர்ப்பாட்டம், வன்முறைகளில் ஈடுபட்டுவரும் படேல் ஜாதியினரை பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்வி, வேலைவாய்ப்பில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத்தில் நேற்று நடைபெற்ற மாநாடு மற்றும் உண்ணாவிரத போராட்டம் போன்றவை கலவரத்தில் கொண்டு சென்றுவிட்டுள்ளன.
குஜராத் மாநிலமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு இன்று போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, படேல் மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று வீடியோவில் பேசி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து மோடி கூறியதாவது: மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல் பூமியில் தற்போதுள்ள கலவர சூழ்நிலை பொருந்தாது. வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான், மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, அனைவரும் வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புங்கள்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படாத பிரச்சினை என்று எதுவுமே கிடையாது. பிரச்சினைகளை நாம் ஒருங்கிணைந்து தீர்ப்போம் வாருங்கள். இவ்வாறு மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.