குஜராத்தை குலுக்கிய படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்கான பேரணி- 10 லட்சம் பேர் பங்கேற்பு!!
அகமதாபாத்: குஜராத்தில் பெரும்பான்மையினராக உள்ள படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி) சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக் கோரி நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத்தில் இன்று சுமார் 10 லட்சம் பேர் ஒன்று திரண்டு தங்களை ஓ.பி.சி. பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
குஜராத் மாநிலத்தில் கணிசமாக உள்ள படேல் சமூகத்தினர் கடந்த 50 நாட்களாக தங்களது முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கி இதரபிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் குஜராத் அரசோ, படேல் சமூகத்தினரின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது.
#PatidarRally #PatidarAnamatAndolan @timesofindia @TOIAhmedabad pic.twitter.com/PsqWrjdnG3
— harit mehta (@haritbmehta) August 25, 2015
அதேநேரத்தில் படேல் சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியோருக்கு மட்டும் (கிரீமிலேயர்) முறையில் இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற யோசனையும் ஒருதரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் படேல் சமூகத்தினரை சமாதானப்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தலையிட்டு வருகிறது.
இந்நிலையில் இப்போராட்டங்களின் உச்சமாக அகமதாபாத்தில் சுமார் 10 லட்சம் பேர் ஒன்று திரண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் பேசிய படேல் சமூகத் தலைவர்கள், நாங்கள் ஒருபோதும் வாழ்நாளில் தேர்தலில் போட்டியிட மாட்டோம்; அப்படி வாக்கு கேட்டு உங்கள் வீட்டுக்கு வந்தால் கல்லால் அடியுங்கள் என்று ஆவேசமாக பேசினர்.
அதேபோல், ஒரு தீவிரவாதி யாகூப் மேமனுக்காக அதிகாலையில் திறக்கின்ற உச்சநீதிமன்றம் இத்தனை லட்சம் மக்களுக்காக கண் திறந்து பார்க்காதா? எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தை மாற்றுகிற வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவிடும் நிலைமை உருவாகும் என்றும் படேல் சமூகத் தலைவர்கள் கொந்தளிப்புடன் பேசினர்.
Crowds swell at GMDC ground for #PatidarRally #PatidarAnamatAndolan @timesofindia @TOIAhmedabad pic.twitter.com/UqSdfvhLWH
— harit mehta (@haritbmehta) August 25, 2015
இந்த பேரணியில் பேசிய படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல், தங்களிடம் கோரிக்கை மனுவை பெறுவதற்காக முதல்வர் ஆனந்திபென் படேல் இந்த மேடைக்கு வரும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் அங்கு பதற்றமும் நிலவி வருகிறது.
படேல் சமூகத்தினரின் இந்த போர்க்கோலம் ஆளும் குஜராத் பாரதிய ஜனதா அரசுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.